Sunday, 26 June 2011

வேதாரண்யம் விபத்தில் 12 குழந்தைகளைக் காத்து உயிர் நீத்த ஆசிரியைக்கு அண்ணா பதக்கம்

Teacher Suganthi
வேதாரண்யம் அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தன்னுயிரைக் கொடுத்து 12 குழந்தைகளின் உயிர் காத்த ஆசிரியை சுகந்திக்கும், தேனியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் அண்ணா பதக்கம் அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு ஆண்டுதோறும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களையும், அரசு சொத்துக்களையும் பாதுகாத்த பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் அண்ணாவின் பெயரில் பதக்கம் வழங்கி சிறப்பித்து வருகிறது.

இவ்விருது பெறுபவருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க மூலாம் பூசிய பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கத்தினை முதல்வர் கருணாநிதி 26-ந் தேதி குடியரசு தினவிழாவின் போது வழங்குவார். இந்த ஆண்டிற்கான அண்ணா பதக்கம் இருவருக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 3.12.2009 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலம் கிராமம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் வேன், நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் இருந்த ஆழமான குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த பள்ளி வாகனத்தில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 21 பள்ளிக் குழந்தைகளும், எம்.சுகந்தி என்ற ஆசிரியையும் இருந்தனர். அப்போது பள்ளிக் குழந்தைகளை, தனக்கு நீச்சல் தெரியாதபோதும், காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு 12 குழந்தைகளை காப்பாற்றி, தண்ணீருக்குள் மூழ்கி ஆசிரியை சுகந்தி இறந்துவிட்டார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர்களை காத்த ஆசிரியர் சுகந்திக்கு அண்ணா பதக்கம் வழங்க பட்டது , அதை சுகந்தி தகப்பனார் வாங்கினார்.

No comments:

Post a Comment